பதிவு:2023-01-12 20:43:55
திருவள்ளுர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜன 12 : திருவள்ளுர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி , நடுநிலைப்பள்ளி , உயா;நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் 12 பணியிடம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 4 பணியிடம் என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.இந்த பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7,500 மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்படும்.
இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதியாக ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வாளராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப் பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நியமனத்தில் முன்னுரிமை மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை மட்டுமே மேலே தெரிவிக்கப்பட்டள்ளவாறு பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்பிக் கொள்ள வேண்டும்.
மேலும், இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2023 மாதம் வரையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் பிப்ரவரி 2023 மாதம் வரையிலும், தேர்வு செய்யப்படும். பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியடங்களை திருவள்ளுர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதிச் சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 18.01.2023 மாலை 5.45-க்குள் ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.