பதிவு:2022-04-23 09:50:55
திருவள்ளூர் அருகே அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மர்ம நபர்கள் மின்வாரிய அலுவலகம் சூறை : மின்வாரிய லைன் மேனுக்கு தலையில் அரிவாள் வெட்டு :
திருவள்ளூர் ஏப் 23 : திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அடிக்கடி மின்சார விநியோகம் தடைப்பட்டு வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து இரவு வழக்கம் போல் மணவாளநகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
இந்நிலையில் மின்வாரிய லைன் மேன் குப்பன் அங்கு சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மணவாளநகர் துணை மின் நிலைய அலுவலகத்திற்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஏன் இதை சீர் செய்யவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், நாற்காலி ஆகியவற்றை சேதப்படுத்தினர். இதில் ஒருவர் அங்கிருந்த இரும்பு கம்பியால் குப்பனின் தலையில் தாக்கினார்.
இதில் மின்வாரிய ஊழியர் குப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குப்பனுக்கு 7 தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து ஊழியரை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என அதிகாரியிடம் முறையிட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மணவாளநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.