பதிவு:2023-02-09 09:50:03
திருத்தணி அருகே 5 ஏக்கர் தைலம் மரங்கள் தீயில் கருகி நாசம். தீயணைத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
திருவள்ளூர் பிப் 09 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவருக்கு திருத்தணி-ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலை அகூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே, 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் முனிரத்தினம் தைலம் செடிகள் வைத்து பராமரித்து வருகிறார்.
தற்போது தைலம் செடிகள் மரங்களாக வளர்ந்துள்ளன. இந்நிலையில் இன்று மதியம் மர்மமான முறையில் தைலம் தோப்பில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அவ்வழியாக சென்றவர்கள் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கும் நிலத்தின் உரிமையாளர் முனிரத்தினம் என்பவருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள், 5 ஏக்கர் தைலம் மரங்கள் தீயில் கருகியது. மீதமுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் இருந்த தைலம் மரங்கள் தப்பின. தைலம் தோப்பில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.