பதிவு:2023-02-24 18:53:37
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறும் போது தவறி விழுந்து பெண் கட்டிடத் தொழிலாளி பலி :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ் மனைவி மல்லிகா (45). கணவரை இழந்த மல்லிகாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கட்டிடித் தொழில் செய்து வந்த இவர்மகன் ஸ்டீபன் என்பவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று வேலைக்கு செல்வதற்காக திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு செல்லும் புறநகர் மின்சார ரயிலில் செல்வதற்காக வந்துள்ளார். நடைமேடை 4-ல் இருந்த புறநகர் ரயில் புறப்பட்ட நிலையில் ஓடிப்போய் ஏற முயற்சித்துள்ளார்.
இதில் ரயிலில் ஏற முடியாமல் தவறி கீழே விழுந்தார். இதனால் முதுகுக்கு கீழ் காயம் ஏற்பட்ட நிலையில் இருந்தவரை பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி மல்லிகா உயிரிழந்தார். இது குறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.