பதிவு:2023-02-28 22:53:21
திருவள்ளூர் அடுத்த 78 களாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜை : பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்பு
திருவள்ளூர் பிப் 28 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட 78 களாம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 107 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அந்த பள்ளிக் கட்டிடம் பாழடைந்தும், இடிந்து விழும் நிலையில் இருப்பதாலும், அங்கு விளையாட்டு மைதானம் இல்லாததாலும் பள்ளி மேலாண்மைக்ஞ குழுவினர் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் கே.சொக்கலிங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து 78 களாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்து தெரிவித்த நிலையில் அரசு நிதியில் 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கே.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், திருவள்ளூர் ஒன்றிய கவுன்சிலரும் பொதுக்குழு உறுப்பினருமான த.எத்திராஜ், திருவள்ளூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.ஜெயசீலன், ஊராட்சி துணைத் தலைவர் டி.ரவி, ஊராட்சி செயலர் சதீஷ், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி பூமி பூஜையில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் த. சுகுமார், கார்த்திக், சிவப்பிரகாசம் சௌந்தர்ராஜன், வார்டு உறுப்பினர்கள் ஜே.ராணி, சி.முனுசாமி, பி.சரண்யாபரத், வி.ஸ்ரீதர், வி. மணிவிமல் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.