பதிவு:2023-02-28 22:57:47
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 20 நாட்களில், 1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரம் 521 ரூபாய் ரொக்கம் மற்றும் 612 கிராம் தங்கம், 10 கிலோ 487 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கை
திருவள்ளூர் பிப் 28 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அக்கோயிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், ஆந்திரா கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்வதுண்டு.
இந்நிலையில் மாசி கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்தி உள்ளனர். அதேபோல் திருத்தணி உபகோயில்களிலும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 2 லட்சத்து 16 ஆயிரத்து 521 ரொக்கம் மற்றும் 612 கிராம் தங்கம், 10 கிலோ 487 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.