பதிவு:2023-03-06 14:05:57
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் டாஸ்மாக் கடையின் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் மற்றும் உடந்தையாக இருந்த டிரைவரும் கைது
திருவள்ளூர் மார்ச் 04 : திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் டாஸ்மாக் கடையின் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ. 1லட்சம் லஞ்சம் வாங்கும் போது டாஸ்மாக் மேலாளர் மற்றும் டிரைவர் ஆகியோரை திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு மேற்கு என 2 மாவட்டங்களாக பிரித்து டாஸ்மாக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 137 டாஸ்மாக் கடைகள் உள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் அமைக்க தாணு என்பவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலைமன்னனிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு பார் நடத்த அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரையும் இழுத்து மூடுவேன் என திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே காக்களூர் வேப்பம்பட்டு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் பார் நடத்தி வரும் தாணு, புதிதாக பார் அமைக்க ஒரு லட்சம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் (திருவள்ளூர்-பொறுப்பு) மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் ஒரு லட்சத்தை தாணு கொடுப்பதற்காக காக்களூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, ஒரு லட்சம் லஞ்சப் பணத்தை டிரைவர் சங்கரிடம் கொடுக்க சொன்னதின் பேரில் தாணு கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் டாஸ்மாக் மேலாளர் கலைமன்னன், மற்றும் டிரைவர் சங்கர் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இருந்த கலைமன்னனுக்கு செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியராக பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு வந்த நிலையில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினரிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.