பதிவு:2023-04-04 11:59:20
திருவள்ளூரில் அரசுப் பேருந்து டிரைவருக்கு சரமாரி அடி : டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவள்ளூர் ஏப் 04 : திருவள்ளூர் நகரின் மையப் பகுதியும் வீரராகவர் திருக்கோயில் அமைந்துள்ள தேரடியில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாைளர்கள் ஒன்று கூடி எந்தெந்த பகுதிக்கு யார் யார் செல்ல வேண்டும் என்று தீர்மானிப்பார்கள். போக்குவரத்து நெரிசலான பகுதியில் சாலை ஓரத்தில் நின்று பிரித்து அனுப்புவது வழக்கம்.
அதே போல் நேற்று செங்குன்றம் பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு தடம் எண் 55 என்ற அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. தேரடி அருகே வந்த போது சாலையோரத்தில் தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்ததால் பேருந்து திரும்ப வழி இல்லாமல் சிறிது நேரம் நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அரசு பேருந்து டிரைவர் கட்டிட தொழிலாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது கைகலப்பாகி கட்டுமானத் தொழிலாளர் ஒருவரை அரசுப் பேருந்து டிரைவர் தாக்கிவிட்டு பேருந்தை கொண்டு சென்று பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் பஸ் நிலையத்துக்குள் நின்ற அரசு பேருந்து டிரைவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் தனியார் பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தனர்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தால் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் சேவை சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.