பதிவு:2023-05-02 12:22:23
கோரமங்கலம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பொதுமக்களோடு கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்
திருவள்ளூர் மே 02 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியம், கோரமங்கலம் ஊராட்சி மந்தைவெளி மைதானத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மராஜு தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுமக்களோடு கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்து கருத்துக்களை வழங்கினர்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும் கிராம வளர்ச்சி திட்டம் குறித்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் குறித்தும் அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்தும் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்தும் தூய்மை பாரத இயக்கத்தில் கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தும் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல் குறித்தும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் நெகிழிக்கு மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் குறித்தும் நெகிழி கழிவு மேலாண்மை குறித்தும் திரவ கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் ஜல்ஜீவன் இயக்கம் குறித்தும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்தும் வறுமை குறைப்பு திட்டம் குறித்தும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட 13 அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதில் முழுமையடைந்து தன்னிறைவு பெற ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.பின்னர் கிராமப்புறத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணி காத்திடும் வகையில் "எங்கள் கிராமம் எழில்மிகு கிராமம்" என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக திருத்தணி நகராட்சி, ம.பொ.சி. சாலையில் உள்ள திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பார்வையிட்டனர்.
கூட்டத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேஷன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மலர்விழி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெயராஜ் பௌலின், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ், கோரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மராஜு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.