பதிவு:2023-05-05 17:07:23
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆலோசனை :
திருவள்ளூர் மே 05 : கோடைக்காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள கீழ்க்காணும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறு திருவள்ளுர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி அதிக வெப்பம் தொடர்பாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் வாயிலாக நாள்தோறும் வெளியிடப்படும் செய்திகளை தெரிந்து கொள்ளவேண்டும். சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும், தாகம் வரும் வரை காத்திராமல் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்.
அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கண்ணாடி, குடை, காலணி அணிந்து செல்ல வேண்டும்.
தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்லும் போது குடிநீர் எடுத்துச் செல்வதுடன் தலை, கழுத்து மற்றும் கைகளை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும். வீட்டில் தயாரிக்கப்படும் மோர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் லஸ்ஸி ஆகிய குளிர்பானங்களையும், அரிசி கஞ்சி போன்ற உணவு பானங்களையும் அருந்த வேண்டும். வெப்பத்தின் காரணமாக ஏற்படும் உடல் பாதிப்புகள் (பக்கவாதம், சொறி, சிரங்கு, உடல் தளர்ச்சி, தலைவலி) ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் தங்க வைப்பதோடு அவற்றிற்கு தேவையான அளவு தண்ணீரை வழங்கிட வேண்டும். அதே நேரத்தில் கோடைகாலத்தில் எதை எதையெல்லாம் செய்யக் கூடாதவை என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது. பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக நண்பகல் 12.00 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள திரவங்களை தவிர்க்கவும் மிக குளிர்ந்த பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்களில் விட்டு செல்ல வேண்டாம். கனமான, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.