பதிவு:2023-05-14 19:06:54
திருவள்ளூர் மாவட்டத்தில் தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மே 13 : உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி 05.08.2011 முதல் திருவள்ளுரில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், திருவள்ளுரில்; இயங்கிவரும் ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான. சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
தற்போது, தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் கூடிய புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி Tn food safety Consumer App பதிவிறக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்கான இணையதளம் மூலம் தெரிவித்து பயனடையலாம். மேலும் புகார்தாரரின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.