திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

பதிவு:2023-05-22 20:29:57



திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர் மே 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 95 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 38 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 64 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 94 மனுக்களும் என மொத்தம் 347 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் வழங்கிய பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டு, அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு ரூ.5,500 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டியும் ஒரு பயனாளிக்கு உலமா பணியாளருக்கான இருசக்கர வாகன மானியத் தொகை பெறுவதற்காக ரூ.25,000-க்கான காசோலையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) சிபின்,துணை ஆட்சியர் (பயிற்சி) சுபலட்சுமி, முட நீக்கு வல்லுநர் ஆஷா, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.