பதிவு:2023-05-31 22:45:08
கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ரூ. 3 கோடியே 29 லட்சத்தில் நிறைவேற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் :
திருவள்ளூர் மே 31 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், கே.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.திராவிட பக்தன், நா.வெங்கடேசன், பா.யோகநாதன், எஸ்.ராணி, வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டி.யாமினி, பி.பூங்கோதை, மூ.நரேஷ்குமார், பா.தரணி, வி.கோவிந்தம்மாள், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், பா.சுபப்பிரியா சக்திதாஸ், பா.சுமதி, ஆர்.கார்த்திகேயன், மு.நீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம், கடம்பத்துார், நரசிங்கபுரம் உட்பட 10 - க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் பழுதடைந்த அங்கன்வாடி மையஙகள், குடிநீர் தொட்டிகள் உட்பட 18 அரசு கட்டடங்களை இடித்து அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 2 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டிலும், 15-வது மத்திய நிதிக்குழு மானியம் மூலம் ரூபாய் ஒரு கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம் செய்தல், மழை நீர் வடிகால்வாய், சாலை பணிகள் செய்வது எனவும், ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்வது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதே போல் நுங்கம்பாக்கம் மற்றும் இருளஞ்சேரி ஊராட்சியில் 30 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.