பதிவு:2023-06-08 23:36:01
காக்களூர் தொழிற்பேட்டையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உற்பத்தி பாதிப்பு : 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிறுவனத்தினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஜூன் 08 : திருவள்ளூர் அடுத்த காக்களூரில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையம் மூலமாக இந்த மின்மாற்றி மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று பெய்த மழையின் காரணமாக இங்குள்ள மின்மாற்றி பழுதடைந்ததாக கூறப்படுகிறது.நேற்று மாலை 3 மணி அளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உற்பத்தி செய்ய முடியாமல் அவதிப்படுவதாக கூறி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய குறைந்தது இரண்டு மூன்று நாட்களாவது ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
350 தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 6000 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் மூன்று நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு வழங்க முடியாத நிலை இருப்பதாலும் உற்பத்தி பாதிக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாலும் மின் இணைச உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிற்சாலைகளை மூடிவிட்டு சாவியை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாகவும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதனால் காக்களூர் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.
இது குறித்து மின் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது காக்களூர் மற்றும் ஈக்காடு செவ்வாப்பேட்டை, காக்களூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் இணைப்பை துண்டித்து அதனை காக்களூர் தொழில்பேட்டைக்கு பகல் நேரத்தில் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மின்மாற்றியை சீரமைக்க துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.