பதிவு:2023-06-08 23:43:07
திருவள்ளூர் அடுத்த நாசரேத்பேட்டையில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருவள்ளூர் - செங்குன்றம் சாலையில் மறியல் : போக்குவரத்து பாதிப்பு :
திருவள்ளூர் ஜூன் 08 : திருவள்ளூர் அடுத்த நாசரேத்பேட்டையில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சிறிய காற்று வீசினாலும் லேசான மழைக்கும் 2 முதல் 5 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் விஷப் பூச்சிகளின் தொல்லை அதிகமாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக மின்சாரத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் மின்சார துறையிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராமத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தால் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நாளை மின்சாரம் சரியாக வழங்க ஏற்பாடு செய்வதாக ஊராட்சி நிர்வாகம் அளித்த உத்தரவினை ஏற்று கிராமத்தினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.