பதிவு:2023-06-22 22:21:09
திருவள்ளூரில் தொழிலதிபரை ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் கைது :
திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் பத்மாவதி நகர் அண்ணா தெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் அஜீத்குமார். இவர் திருவள்ளூர் சிவிஎன் சாலையில் டயர் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அஜித்குமாருக்கும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2020-ல் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ராமமந்திரி பகுதியைச் சேர்ந்த அப்லகுண்டா என்பவரது மகன் குர்மனா கிருஷ்ணா(39) மற்றும் சூரிபாபு மகன் தமரசிங் (38) ஆகியோர் ஏ பி 39 யூசி 0811 என்ற இரு சக்கர வாகனத்தில் சிவிஎன் சாலையில் கடை அருகே வந்து கொண்டிருந்த அஜீத்குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆந்திர மாநிலத்தில் அஜீத்குமாரின் மனைவி தங்கள் மீது வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளதாகவும் அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 10 லட்சம் தர வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் உன் மனைவி மற்றும் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து அஜீத்குமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் விரைந்து வந்து குர்மனா கிருஷ்ணா(39), தமரசிங் (38) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் கடந்த 2019-ல் விசாகப்பட்டினத்தில் உள்ள அஜீத்குமாரின் மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்ததும் இதனால் அவர் விசாகப்பட்டினம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் வருமானம் இல்லாததால் அஜீத்குமாரை பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.