பதிவு:2023-07-21 20:19:02
வெள்ளவேடு அருகே சேம்பர் உரிமையாளர்கள் பில்டர்ஸ் ஆகியோரிடம் பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி உள்பட ஏழு பேர் கைது
திருவள்ளூர் ஜூலை 21 : பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செங்கல் சேம்பர் உரிமையாளர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடும் பில்டர்ஸ் ஆகியோரிடம் மாமூல் கேட்டு மிரட்டுவதாக பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் ஜவகரிடம் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனை அடுத்து மேற்கொண்ட தீவிர விசாரணையில் பூந்தமல்லி அடுத்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மனோகரன் மகன் ராஜேஷ் (32) மற்றும் சுகுமார் மகன் விஷ்வா (23) மற்றும் இவர்களது கூட்டாளிகள் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.ராஜேஷ் மீது 4 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு, ஆள் கடத்தல், கூட்டுக் கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல் என 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.அதேபோல் கூட்டாளி விசுவா மீது கொலை, கொலை முயற்சி, கூட்டுக் கொள்ளை என 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து ராஜேஷ் மற்றும் விஷ்வாவை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ராஜேஷின் கூட்டாளிகள் 5 பேர் செவ்வாப்பேட்டை அடுத்த அயத்தூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து காவல் உதவி ஆணையர் ஜவகர் தலைமையில் தனிப்படை அமைத்து ராஜேஷ் மற்றும் விஷ்வாவை கைது செய்தனர். இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோல் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயத்தூரில் பதுங்கி இருந்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேசன், நவீன், சசிதரன் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் , காவல்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரையும் செவ்வாப்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து இரண்டு பைக், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான தொழில் செய்யும் பில்டர்ஸ் ஆகியரிடம் அதிக அளவில் பணம் கேட்டு மிரட்டியதாக ஒரே நேரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.