பதிவு:2023-07-21 20:22:36
திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி : மாவட்டதேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூலை 21 : 01.01.2024-ஐ தகுதியேற்புநாளாகக் கொண்டு எதிர் வரும் 05.01.2024 அன்றுவாக்காளர் பட்டியல் வெளியிட இந்தியதேர்தல் ஆணையத்தால் பல்வேறுஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, 01.01.2024-ஐ தகுதியேற்புநாளாகக் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்கமுறைதிருத்தம் முகாம்கள் நடத்தி எதிர்வரும் 05.01.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விபரங்களையும் சரிபார்த்து வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21-ம் தேதிவரை வாக்குச்சாவடிநிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,திருத்தல் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம்,கட்டிடமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்றபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
முன்திருத்த நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடு,வீடாககுடும்பத்தில் உள்ளவாக்காளர் விபரங்களை சரிபார்த்திட வருகைதர உள்ளனர். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும்,விரைவாகவும் மேலும், 100 சதவிகிதம் தூய்மையாகவும்,துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடிநிலை அலுவலர்களுக்கான தேவையான விபரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்டத்தின் மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.