பதிவு:2023-08-14 20:26:36
திருவள்ளூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு டிஜிட்டல் பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
திருவள்ளூர் ஆக 14 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மும்முடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் காத்தவராயன்.இவரது ஒரே மகன் சதீஷ் என்கின்ற சதீஷ்குமார் (20). சதீஷ் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரா கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள பழண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நான்காவது வாரம் வாரம் தோறும் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெறும்.இந்த ஆண்டுக்கான அம்மன் கோவில் திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.இந்த விழாவிற்கு சதீஷ்குமார் தனது நண்பர்களான கல்லூரி மாணவன் தனுஷ் என்கிற முனுசாமி (19)விஜய் ( 24) ஆகியோருடன் இனைந்து இரவு கோவில் அருகே பள்ளம் தோண்டி இரும்பு பிரேம் கொண்ட டிஜிட்டல் பேனர் வைக்க உயரத்தில் தூக்கி கட்ட முயற்சித்து உள்ளனர்.
அப்போது இரவு நேரம் என்பதால் தாழ்வாக சென்று கொண்டு இருந்த மின்கம்பி மீது பேனர் கம்பி உரசியுள்ளது.சதீஷ்குமார் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதம் இருப்பதால் காலில் காலணி அணியாமல் இருந்துள்ளார். இதனால் மின்சாரம் விரைவாக அவரை தாக்கி உள்ளது.மேலும் தனுஷ் , விஜய் காலில் காலணி அணிந்திருந்ததால் அவர்கள் இருவரை மின்சாரம் லேசாக தாக்கியதில் கைகளில் மட்டும் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.இதில் அதிக தீக்காயங்களுடன் இருந்த சதீஷ்குமாரைஅப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீ பெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அவர் நண்பர்களான தனுஷ் விஜய் சிகிச்சைக்காக சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். சதீஷ்குமார் வீட்டின் ஒரே மகன் என்பதால் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அவர் சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த கிராமத்தில் மின்சார வாரிய அலட்சியப் போக்கால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிய நிலையில் இருப்பதால்இத்தகைய விபத்து ஏற்படுவதற்கு காரணம் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இதுபோன்று விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக மின்சார வாரியம் மின்கம்பிகளை உயரத்தில் கட்டி சரி செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் திருவிழாவுக்காக டிஜிட்டல் பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்ததால் இரண்டு நாட்கள் விசேஷமாக நடைபெறும் அம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.