பதிவு:2023-09-21 19:43:57
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார விளம்பர வாகனம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்
திருவள்ளூர் செப் 21 : முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் வருகிற செப்டம்பர் 23-ஆம் நாள் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ராயல் என்ஃபீல்டு, அசோக் லைலாண்ட்,பாப்புலர் மெகா மோட்டார்ஸ், மெரேன் இன்ஃபோ ஸ்டரக்ட், எமரால்டு குளோபல், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர், கெவின் இந்தியா, இந்தியா- ஜப்பான் கம்பெனி போன்ற 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான 10,000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளனர்.
இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சார விளம்பர வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
அப்பொழுது திருவள்ளூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் இம்முகாம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூன்று நாட்களுக்கு இப்பிரச்சார விளம்பர வாகனம் அப்பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் எனவும் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.இதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் க.விஜயா,பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.