பதிவு:2023-09-21 19:45:29
திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைத்தனர்
திருவள்ளூர் செப் 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் கடந்தாண்டை விட நிகழாண்டில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருவள்ளூர் -111, திருத்தணி -121, ஊத்துக்கோட்டை -209, பொன்னேரி -46, கும்மிடிப்பூண்டி-153 என மொத்தம் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் 640 இடங்களில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன.
இதில் திருவள்ளூர் பகுதிகளில் மட்டும் 111 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதன்பேரில் பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக செல்வதற்காக ஆயில் மில் பகுதிக்கு வாகனங்களில் கொண்டு வந்து, அங்கிருந்து விநாயகர் சிலைகள் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட வழித்தடங்களில் விதிமுறைப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, வெங்கத்தூர், மணவாளநகர் உள்பட பகுதிகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மு.வினோத்கண்ணா தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிறப்புப் பூஜையுடன் விசர்ஜன ஊர்வலம் புறப்பட்டுச் சென்றது. இந்த ஊர்வலம் ஜே.என்.சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோயில் தேரடி, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, காக்களூர் சாலை வழியாக ஏரிக்கு மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல், பக்திப் பாடல்களுடன் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து காக்களூர் ஏரியில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டி தண்ணீர் நிரப்பி தயாராக வைத்திருந்த குளத்திற்குள் ஒவ்வொரு சிலையாக விசர்ஜனம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கராத்தே செல்வம், அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா, நகர செயலாளர் கந்தசாமி, பாமகவை சேர்ந்த பால யோகி, வெங்கடேசன், இ.தினேஷ்குமார்,பா.ஜ.கவைச் சேர்ந்த ராஜ்குமார், கருணாகரன், ஆர்யா சீனிவாசன், சதீஷ்குமார், பாலாஜி, விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக சென்னை - திருப்பதி சாலையில் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்பி பா சிபாஸ் கல்யாண் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி, தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளர் அனுமந்த் முன்னிலையில் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.