பதிவு:2022-05-10 23:10:52
திருவள்ளூர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பேருக்கு பாதுகாவலர் சான்றிதழ்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் மே 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 59 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 32 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 37 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 46 மனுக்களும்; என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,480 வீதம் ரூ.27,400 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, மனவளர்ச்சி குன்றியோருக்கான பாதுகாவலர் சான்றிதழ் 18 நபர்களுக்கும், நிர்மயா ஹெல்த் இன்சூரன்ஸ் அட்டை 10 மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கி உற்சாகப்படுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, ஆஷா தொண்டு நிறுவன இயக்குநர் டி.சரவணன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.