பதிவு:2023-12-06 15:57:32
திருவள்ளூர் அடுத்த புதுவள்ளூர் பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிப்பு : குடிநீர் இல்லாததல் உடனடியாக மின்சாரம் வழங்கக் கோரி நள்ளிரவில் சாலை மறியல்
திருவள்ளூர் டிச 06 : திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் அருகே புதுவள்ளூர் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் மேலும் அப்பகுதியில் குடி தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதியுற்று வருகின்றனர்.
மழை நின்ற பின்பும் இதுவரை அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்காததால் பலமுறை மின்வாரியத்திற்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆத்திரம் அடைந்த புதுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அரண்வாயல் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் புதுவள்ளூர் பகுதியில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதாலும் மின் இணைப்பு தருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் உடனடியாக அதனை சீர் செய்து அப்பகுதியில் மின் இணைப்பு தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து மறியலை கைவிட்டு களைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது மேலும் தங்கள் பகுதிக்கு மின் இணைப்பு தராத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தனர்.