பதிவு:2023-12-28 15:13:31
திருவள்ளூர் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் தகவல் :
திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் தனியார்(பதின்ம) மேனிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000 இரண்டாம் பரிசு ரூ.7,000 மூன்றாம் பரிசு ரூ.5,000 என வழங்கபெறவுள்ளன.
11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 09.01.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் திருவள்ளூர், தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேனிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவுசெய்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனுப்பவேண்டும்.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.01.2024 புதன்கிழமை அன்று காலை 9 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிக்கு ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வரே ஒரு போட்டிக்கு ஒருவர் என கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு 3 பேர் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். தமிழார்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.