பதிவு:2024-02-06 16:03:28
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 489 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் பிப் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 489 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 123 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 85 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 78 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 91 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 112 மனுக்களும் என மொத்தம் 489 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி,துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வமதி, உதவி ஆணையர் (கலால்) ஆர்.ரங்கநாஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், துணை ஆட்சியர் (பயிற்சி) சுபலட்சுமி, பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.