பதிவு:2024-02-07 13:25:25
மேல்நல்லாத்தூரில் மளிகை பொருட்களை வாங்கிவிட்டு பணம் கேட்டு தர மறுத்ததுடன், மாமூல் கேட்டு தராததால் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம நபர்கள் ஓட்டம் : நடவடிக்கை எடுக்காததால் நாடார் சங்க நிர்வாகிகள் தாலுகா காவல் நிலையம் முற்றுகை :
திருவள்ளூர் பிப் 08 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) இவர் பட்டறை - அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் 5-ஆம் தேதி இரவு மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தர மறுத்துள்ளனர். இதனால் பணத்தை கொடுக்காமல் பொருள் தரமுடியாது என ஆறுமுகசாமி தெரிவித்தார். இதனால் அந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேலு மற்றும் மாலு ஆகியோர் நான் யார் தெரியுமா என்று கேட்டு ஆறுமுகசாமியை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
அப்போது கடைக்கு வந்த சிலர் ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இருப்பதை பார்த்து சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஆறமுகசாமியின் மகன் தேன்ராஜ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் குறித்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
ஆனால் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 48 மணி நேரம் ஆகியும் இது வரை தாக்கியவர்களை கைது செய்யாததால் சென்னை நாடார் சங்க நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் உறுதி அளித்தார். மாமூல் கேட்டு தர மறுத்ததால் தாக்கியவர்களை காவல் துறை கைது செய்யாவிட்டால் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் வியாபாரிகள் எச்சரித்தனர்.