பதிவு:2024-02-13 18:22:14
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீண்டும் வேலை வழங்கக் கோரி போராட்டம் : ஆதரவு தெரிவித்த முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் பாமக,கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது :
திருவள்ளூர் பிப் 13 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் ,மேல்நல்லாத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகம் வேலை வழங்கியிருந்தது. தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்ததால் தொழிற்சாலையில் 22 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர்கள் என 172 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதலில் இருந்த நிர்வாகம் கைமாறி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.சி.ஏ நிர்வாகத்திற்கு சென்றது. இந்நிலையில் நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்களை புதியதாக வந்த தொழிற்சாலை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.
இதனையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 5 வருட காலமாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டம், கம்பெனிக்கு பூட்டு போடும் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
திருவள்ளூர் வட்டாட்சியரிடம் 10 முறை பேச்சு வார்த்தையும், கோட்டாட்சியர் முன்னிலையில் 15 முறை பேச்சு வார்த்தையும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 17 முறை பேச்சு வார்த்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் 2 முறை பேச்சு வார்த்தையும், எம்எல்ஏ முன்னிலையில் 4 முறை பேச்சு வார்த்தையும், தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் 7 முறை பேச்சு வார்த்தையும், முதலமைச்சர் தனிப்பிரிவில 7 முறை மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் வேலையிலிருந்து நீக்கியவர்களுக்கு இது வரை பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அனைத்து இடங்களிலும் புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்காததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் இன்று தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதனையடுத்து .போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ கண்ணன், அதிமுக நிர்வாகிகள் சூரகாபுரம் சுதாகர், சிற்றம் சீனிவாசன், ஞானகுமார், எழிலரசன், பாலாஜி, செந்தில்குமார், எஸ்.ஏ.நேசன், விஜயகாந்த், பா.ம.க.மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மற்றும் ந. வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தளபதி சுந்தர் ஆகியோர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்புக்காக வந்திருந்த திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, தாலுக்கா இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் மற்றும் போலீசார் பேசிக் கொண்டிருந்த போதே தொழிலாளர்களையும், ஆதரவு தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர்,முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ, மற்றும் பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை திடீரென கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்களை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு வேனில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.