பதிவு:2024-02-14 18:12:20
திருவள்ளூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் :
திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் விடுப்பு எடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் க.வெண்ணிலா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சி.காந்திமதிநாதன் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜெய்கர் பிரபு கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்கள் உருவாக்க வுேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து வரும் 22-ஆம் தேதி அலுவலக நுழைவுவாயில் காத்திருப்பு போராட்டத்திலும், 27-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்திலும் வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும் வலியுறுத்தினர்.மாநில துணை தலைவர் ஏ.மணிகண்டன், மாவட்ட பொருளாளர் ச.முனுசாமி உள்பச 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.