திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

பதிவு:2024-03-28 17:39:17



திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தகவல் :

திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தியுள்ளார்.வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை, வெளியில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் :

நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவைகளின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.தாகம் எடுக்காவிடிலும்கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர்மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும்.

பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்.மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.வெளியில் செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.மதிய நேரத்தில் வெளியில் செல்லும்போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.மயக்கம் (அ) உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கான வழிமுறைகள் :

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்ல கூடாது.பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.குழந்தைகளின் சீறுநீரை சோதித்துப் பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம்.

முதியவர்களுக்கான வழிமுறைகள் :

தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.முதியவர்களின் அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும்.மதிய நேரத்தில் கண்டிப்பாக வெளியில் செல்வதை தவிர்க்கவும்.வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கான குறிப்புகள் :

கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும்.அவசியமாக போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும்.செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது.

மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்த ஆண்டு, கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட்சர்க்யூட் ஏற்பட்டு, அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும், மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும்அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன. எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன், கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களின் ரெகுலேட்டரை சுவிட்ச்-ஆப் செய்து வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து விட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.