திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே தகராறு : பெண் தூக்கிட்டு தற்கொலை : மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் :

பதிவு:2024-03-28 17:54:54



திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே தகராறு : பெண் தூக்கிட்டு தற்கொலை : மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் :

திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே தகராறு : பெண் தூக்கிட்டு தற்கொலை : மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் :

திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி(25) என்ற பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று 25-ஆம் தேதி மதியம் குழந்தை குறித்து மாமனார் மாமியார் மற்றும் ஷாலினிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஷாலினி தனது தாய் தந்தைக்கு போன் செய்து குழந்தை இல்லாத காரணத்தால் மாமனார் மாமியார் மற்றும் கணவர் ஆகியோர் துன்புறுத்துவதாக அழுது உள்ளார். இந்நிலையில் இன்று விடியற்காலை ஐந்து மணி அளவில் பெண்ணின் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சிடைந்த இளம் பெண் ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பார்த்துள்ளனர். ஆனால் அதிகாலை 3 மணிக்கு செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்த இவர்கள் ஏன் தங்களுக்கு 5 மணிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சந்தேகம் தெரிவித்தனர்.

இதனையடுத்து செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் முரளிதரன் குடும்பத்தினர் மாலை வரை மருத்துவமனைக்கு வந்து பார்க்கவில்லை. மகளின் திருமணத்திற்கு ரூ.12 லட்சம் ரொக்கம், நகைகள் அனைத்து சீர்வரிசைகளும் செய்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் குழந்தை இல்லை என தன் மகளை கொன்று விட்டதாகவும் மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட கணவன் முரளிதரன், மாமனார் மாமியார் ஆகியோரை கைது செய்யும் வரை ஷாலினி உடலை வாங்க மாட்டோம் என கூறி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் ஆகியோர் ஷாலினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.