பதிவு:2024-06-22 12:15:10
பூந்தமல்லி அருகே வீட்டில் வளர்த்த நாயை நடை பயிற்சி அழைத்து சென்ற போது சிறுவனை கடித்து குதறியதால் பரபரப்பு :
திருவள்ளூர் ஜூன் 22 : பூந்தமல்லி அடுத்த பொழுமணிவாக்கம் சார்லஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி எலிசபெத். இவர்களுக்கு துஜேஷ்(11), என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் நேற்று வீட்டின் வெளியே துஜேஷ் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் எதிரே வசிக்கக் கூடிய கார்த்திக் என்பவர் அவரது வீட்டில் வளர்க்கக்கூடிய ராட்வீலர் என்னும் நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நிலையில் திடீரென வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து அந்த நாய் எகிறியதால் அருகில் இருந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் அந்த நாய் விளையாடி கொண்டிருந்த துஜேசை கடித்ததில் அவரது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுவன் ரத்த வெள்ளத்தில் அலறினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நாயை இழுத்து பிடித்த நிலையில் காயம் அடைந்த சிறுவனை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இந் நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது இன்று காலை 10 மணி அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.