பதிவு:2024-06-27 12:01:43
திருவள்ளூரில் கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜூன் 26 : பொது சுகாதார துறையின் களப்பணிகளி்ல் பணியாற்றும் கிராம , பகுதி, சமுதாய சுகாதார செவிலியர்கள் பல்வேறு கோரிக்ககளை வலியுறுத்தி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை 350-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பி.தனலட்சுமி முன்னிலை வகித்தார். துணை தலைவர் கோமதி வரவேற்றார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 320 துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு களப்பணி சார்ந்தும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் பணியாற்றிட தமிழக அரசு நிர்ப்பந்திப்பதாக கூறி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். துணை சுகாதார நிலையத்திற்கு இடைநிலைப் பணியாளர்களை நியமனம் செய்வதை தவிர்த்திட வேண்டும். தாய் சேய் நலப் பணிகளில் மேற்கொள்ளப்படும் கர்ப்பிணிப் பெண்கள் பதிவேடு, ஆதார் அட்டை இணைத்தல் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி வழங்கும் திட்டத்தில் சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கிறது. தற்போது தங்களிடமுள்ள செல்போனிலேயே இந்த பணிகளை செய்வதில் சிரமம் இருப்பதால் முறையான பயிற்சி மற்றும் அதற்கு தேவையான லேப்டாப் - டேப் போன்ற பொருட்களை வழங்க வேண்டும்.
ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு டேட்டா ஆப்பரேட்டரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் மாநில தலைமை எடுக்கும் முடிவின் படி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.