திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-10 12:10:13



திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 10 : 2024-25 ஆம் நிதியாண்டில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் துவங்க, பட்டதாரி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சம் மானியம் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது. மேற்கண்ட இத்திட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள் தங்களது மூலதனத்தில் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அனுமதிக்கூடிய சுய தொழில்கள் நிறுவும் பொருட்டு மானியம் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பயனடையும் பட்டதாரிகளுக்கு மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி / வட்டி மானியம் போக கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சம் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 21 முதல் 40 வயதுடைய ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவரகவும் இருக்க வேண்டும்.

கணினி திறன் பெற்ற மற்றும் குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும். தேவையான ஆவணங்களான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பிற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகும்.

இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரிஸ் நெட் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தங்களின் விரிவான திட்ட அறிக்கையை சம்மந்தப்பட்டவட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை பட்டதாரி இளைஞர்கள் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.