பதிவு:2024-07-19 12:31:32
திருவள்ளூர் நகராட்சி கண்ணதாசன் நகர் காமாட்சி அவென்யூவில் ரூ.50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் : நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை :
திருவள்ளூர் ஜூலை 19 : தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பூங்கா ஆக்கிரமிப்புகள், கோயில் நில ஆக்கிரமிப்புகள், சாலை ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் மீட்டு வருகின்றனர்.
வீட்டுமனை பிரிவு அமைப்பவர்கள் அரசு விதிமுறைப்படி பூங்காவிற்காக நிலத்தை ஒதுக்கீடு செய்கின்றனர். ஆனால் அதனை முறையாக அமைக்காமல் பொங்கவிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தையும் வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்து விடுகின்றனர்.அது காலப்போக்கில் வீட்டு மனை ஆகவே மாறி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் நகராட்சி 11-ஆவது வார்டுக்கு உட்பட்ட எம். ஜி.எம்.நகர், 13-ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏ.எஸ்.பி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திருவள்ளூர் எம்எல்ஏ விஜி ராஜேந்திரனால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி, கண்ணதாசன் நகர், காமாட்சி அவென்யூ பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இணைப்பு சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் நகர அமைப்பு ஆய்வாளர் விஜயா, சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் இணைப்பு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுச்சுவர், ஷெட், குளியலறை மற்றும் பின்பக்க சுற்றுச்சுவர் ஆகியவற்றை இடித்து அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.ரூ.50 லட்சம் மதிப்பிலான இணைப்பு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டதாக நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு தெரிவித்தார்.