பதிவு:2024-07-27 12:07:19
திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க 24 அதிநவீன இருசக்கர வாகனங்கள் : மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜூலை 27 : திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய 4 உட்கோட்டத்தில் உள்ள 22 காவல் நிலையங்கள், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் 4 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை, திருட்டு உள்ளிட்டவை நடைபெற்று பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதோடு, குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் சிறப்பு காவல் துணை ஆய்வாளர்கள் மேற்பார்வையில் ரோந்துப் பணிகள் நடைபெற்றது. இருப்பினும் அந்த குற்றச் சம்பவங்கள் பெருகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் 24 மணி நேரமும், ரோந்து செல்ல திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஈகிள் பாட்ரோல் (கழுகு ரோந்து) பயன்பாட்டினை திருவள்ளூர் மாவட்ட மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இருசக்கர ரோந்து வாகனங்கள் திருவள்ளூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும். இந்த வாகனத்தில் காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ள வாக்கி டாக்கி, சைரன் விளக்கு, ஜிபிஆர்எஸ் கருவி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது.மேலும் 3 சுழற்சி முறையில் இந்த ரோந்து வாகனம் மூலம் குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல், சட்டம் - ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் காவல்துறையின் இலவச தொலைபேசி எண் 100-க்கு வரும் அழைப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுதல், விபத்துகள் உள்ளிட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் பொது மக்களிடையே பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்துதல், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவா்களின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகுமார் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தேவநாராயணன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் செந்தில், சந்திரசேகர், பார்த்திபன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.