பதிவு:2022-05-26 13:05:48
நசரத்பேட்டையில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச உண்டு, உறைவிட பயிற்சி முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மே 26 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், நசரத்பேட்டை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மருத்துவம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இலவச உண்டு, உறைவிட பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, மாணவ, மாணவியர்களோடு கலந்துரையாடி, ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 200 அரசு பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களை தேர்வு செய்து, இந்த மாணவ, மாணவியர்களுக்கு 50 நாட்கள் நீட் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் உங்களுக்கு கல்வித்துறையில் இருந்து பல்வேறு முயற்சிகள் எடுத்து மாநிலத்திலேயே நம் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் நீட் தேர்வுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, மொத்தம் 830 மாணவர்கள் இந்நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அத்தகைய விண்ணப்பித்துள்ள மாணவர்களில் 200 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் மட்டுமல்லாமல், கடந்த வருடம் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெற கடினமாக உழைக்கும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒரு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 50 நாட்கள் பயிற்சியில் உங்களது முழு கவனமும் இருக்க வேண்டும். உங்களுக்கு கூடுதல் நன்மைகள் உள்ளது. அதாவது, மாநிலத்திலேயே புகழ்பெற்ற ஆசிரியர்கள் உங்களுக்கு இந்த 50 நாட்கள்; பயிற்சி எடுக்கின்றனர். நாள்தோறும் குறிப்பிட்ட தலைப்புகளில் கொண்ட பாடங்களை எடுப்பார்கள். அதற்கான தேர்வுகளையும் நடத்துவார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.இதனை சரியான முறையில் பின்பற்றி பயின்றால் நீங்கள் நல்ல முறையில் தேர்வு எழுதி வெற்றி பெறலாம்.இந்த வருடம் நல்ல முறையில் அரசு மருத்துவமனைகளில் சீட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த விடுதி மற்றும் பயிற்சி வகுப்புகளை ஆசிரியர்கள் நல்ல முறையில் கவனித்துக்கொள்வார்கள்.
ஒரு சில பள்ளிகளில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு சிரமப்படுகின்ற மாணவர்களுக்கு, அதற்கான கட்டணத்தை ஆசிரியர்களே கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக ஒரு பெரிய அளவில் முயற்சி எடுத்ததால் தான் இன்று இந்த பெரிய பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடத்திட முடிந்தது. இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றிபெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், ஆவடி மாவட்ட கல்வி அலுவலர் ஆ.ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன், ஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி நிறுவனர் கே.ராமதாஸ், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.