பதிவு:2024-08-16 18:59:45
78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரிட்டிவாக்கம் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்பு :
திருவள்ளூர் ஆக 16 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதையொட்டி பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரிட்டி வாக்கம் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணைய வழிவரி செலுத்தும் சேவை, இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடிப்பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரி பல் வகைமை வாரியம் – உயிரி பல் வகைமை மேலாண்மைக் குழு செயல்பாட்டை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், ODF Plus Rising Village மற்றும் இதர பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது. தொடர்பாக கிராமசபைக் கூட்டத்தில் கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டது.
அப்பொழுது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது : கிராமசபை கூட்டமானது வருடத்திற்கு 6 முறை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் கிராமப் பகுதியில் அதிக அளவு வளர்ச்சி கண்டுள்ளது சாலை வசதி, குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஊராட்சி தலைவர் நூலகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.உடனடியாக நூலக கட்டடம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதைபோல் நல்ல குடிநீர் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார் உடனடியாக உங்கள் கிராமத்திற்க்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.100 நாள் வேலை திட்டங்கள் வாயிலாக அதிக அளவில் உங்களின் அடிப்படைத் தேவைகளான கட்டடம் கட்டும் பணி மற்றும் விவசாய பணிகளுக்கு பூர்த்தி செய்து கொள்ளலாம். பொதுமக்களாகிய நீங்கள் தூய்மை பணியாளர்கள் வரும் பொழுது மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் இவ்வாறு நீங்கள் பிரித்து வழங்கும் குப்பைகள் மக்கும் குப்பை உரமாகவும் , மக்காத குப்பை அரைத்து சாலை போடுவதற்கு டீ சர்ட் ஆடை நெய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது வெளிப்புறங்களில் மலம் கழிப்பதால் தொற்று நோய் உருவாவதற்கு காரணமாக அமையும் ஆகவே பொது மக்களாகிய நீங்கள் கழிப்பறையினை உபயோகிக்க வேண்டும். ஆகவே உங்கள் கிராமத்தினை தூய்மையான கிராமமாக அமைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.
பின்னர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வை. ஜெயக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி ) ஆயுஷ் குப்தா, வேளாண் இணை இயக்குநர் முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரணி, பூண்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மகாலட்சுமி, , ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் மதன்,பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ், முரளி மற்றும் அரசு அலுவலர்கள் பட பலர் கலந்து கொண்டனர்