பதிவு:2024-08-21 11:54:42
காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் பெண்ணின் துப்பட்டாவும் தலைமுடியும் சிக்கியதால் தலை துண்டாகி பெண் பலி :
திருவள்ளூர் ஆக 21 : திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது.
அப்போது பால் உற்பத்தியாகி பாக்கெட் செய்து வெளியே வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் கார்த்தி என்பவரது மனைவி உமா மகேஸ்வரி(30) என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது துப்பட்டாவும் தொடர்ந்து அவரது தலை முடியும் இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. இதனால் உமா மகேஸ்வரியின் தலை துண்டாகி மெஷினிலும் உடல் கீழே தரையில் விழுந்து இரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி கந்தன், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உமா மகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உமா மகேஸ்வரி சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது கணவர் கார்த்தி இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும், இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது .மேலும் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து உமா மகேஸ்வரி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த ஆறு மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அசம்பாவிதம் காரணமாக காக்களூர் பால் பண்ணையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.