பதிவு:2024-09-02 12:35:14
செப்டம்பர் 3 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பாக சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தகவல் :
திருவள்ளூர் ஆக 31 : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டுவரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும்.1949 ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்,சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை,சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிவருகிறது. திருவள்ளூர் கிளை அலுவலகத்தில் (முகவரி-86, C & D - 2வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை-600058) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் விழா 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறுகிறது.
இச் சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மான்யம், 5 விழுக்காடு வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும்.
இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
செப்டம்பர் மாதம் 3 ம் தேதி செவ்வாய்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள ஜி.டி.பி ஹாலில், காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பாக நடைபெறும் சிறப்பு விழாவுக்கு வருகை தந்து பயன்பெற வேண்டுமாறும், மேலும் தகவல்களுக்கு 9962948002, 9444396845,9445023485, 9551670581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.