பதிவு:2022-05-28 17:05:21
திருவள்ளூர் அருகே சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவியை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை : திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருவள்ளூர் மே 27 : திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் குப்பத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (43). இவரது மனைவி பத்மா. இருக்கு 14 வயதில் ஒரு மகளும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவன் நாகேந்திரன் கடந்த 20 07 2015 அன்று ஆவடி ரெட்டிப்பாளையம் சின்னம்மன் கோயில் தெருவில் உள்ள மனைவி பத்மா வீட்டிற்கு சென்று, வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்துமாறு கூறியுள்ளார்.
மனைவி பத்மா குடும்பம் நடத்த வர மறுக்கவே திரும்பி சென்ற கணவன் நாகேந்திரன் மீண்டும் மாலை வீட்டின் பின்புறம் நின்று கொண்டு மனைவி அழைத்துள்ளார். அப்போது அங்கு வந்த மனைவி பத்மாவை இறுக்கமாக பிடித்து பிளேடால் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.அமுதா ஆஜராகி வாதாடினார்.
மனைவியை பிளேடால் அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் நிரூபிக்கப் பட்டதை அடுத்து நீதிபதி சுபத்ரா தேவி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.இதையடுத்து கொலை குற்றவாளி நாகேந்திரன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.