பதிவு:2024-09-17 12:03:52
திருவள்ளூரில் வரும் 20 ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் தா.பிரபு சங்கர் தகவல் :
திருவள்ளூர் செப் 16 : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதனடிப்படையில் வரும் 20.09.2024 வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தனியார்துறை இணையதளத்தில (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்துகொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு தனியார்துறையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், கணக்காளர். டெக்னீஷியன், மெஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது எனவும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் தா.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.