பதிவு:2022-05-28 17:13:03
திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மே 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்,உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 இலட்சம் வீதம், ரூ.10,000 மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 முடிய) வழங்கி வருகிறது.
விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர்,ஒரு நிர்வாகி,ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்),ஒரு ஆட்ட நடுவர்,நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10.000 க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இத்திட்டத்தின்படி முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்,உடற்கல்வி ஆசிரியர்,விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர்,ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர்,ஒரு ஆட்ட நடுவர்,நடுவர்,நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்துகொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைதொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது.ஒருவர் காலமாகும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும்.விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும்.விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பித்தல் வேண்டும்.
இவ்விருதிற்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் மேற்காணும் விதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.விளையாட்டுப் போட்டிகளின் பட்டியல்கள்: ஒலிம்பிக், சர்வதேச ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். இன்னும் சில போட்டிகளின் விவரங்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.முந்தைய மூன்று ஆண்டுகளான 01.04.2018 முதல் 31.3.2022 முடிய பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்வீராங்கனைகளுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர்ஒரு நிர்வாகிஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்), ஒரு ஆட்ட நடுவர்நடுவர்நீதிபதி ஆகியோர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்|| என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டிய கடைசி நாள். 10.06.2022 ஆகும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.