பதிவு:2024-09-19 12:35:41
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் அறிவிப்பு :
திருவள்ளூர் செப் 19 : 2024 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 09.10.2024 அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல்பரிசு ரூ.5000, இரண்டாம்பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டுபேரைத் தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.
பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்மன்றம் வாயிலாக கீழ்நிலையில் முதல்சுற்று பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தெரிவுசெய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சலில் 07.10.2024 ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளி போட்டிக்குரிய தலைப்புகள் ரோஜாவின் ராஜா நேரு. சமாதானப் புறா நேரு, எங்கள் மாமா நேரு,கல்லூரி போட்டிக்குரிய தலைப்புகள் விடுதலைப் போராட்டத்தில் நேருவின் பங்களிப்பு,நேரு வகுத்த ஐந்தாண்டுத் திட்டங்கள், அன்னை இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் ஆகும்.
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு 09.10.2024 அன்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கப்பெறும். இப்போட்டிகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.