பதிவு:2024-09-26 12:44:13
கைதியின் காதலியை மிரட்டி 3 மாதமாக உல்லாசம் அனுபவித்த வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் :
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த பிராயம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கார்த்திக் (31). கார் ஓட்டுனரான இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை அழைத்து வந்து பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் செந்தூர்புரத்தில் தனியாக அறை எடுத்து 3 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் வெள்ளவேடு போலீசார் கைது செய்ததால் இந்தப் பெண் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு கார்த்திக்கை மீட்பதற்காக வந்துள்ளார்.
அப்போது வெள்ளவேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் பணி புரியும் தலைமை காவலர் ஏசுதாஸ் என்பவர் அந்தப் பெண்ணிடம் உனது கள்ளக்காதலன் சீக்கிரமாக வெளியே வரவேண்டும் என்றால் அவர் மீது மேலும் வழக்குகள் பதிவு செய்யாமல் இருப்பதற்கு தனக்கு நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் கார்த்திக் சிறையில் இருக்கும் வேலையில் தலைமை காவலர் ஏசுதாஸ் கள்ளக் காதலியுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.மூன்று மாதங்கள் சிறையிலிருந்து கார்த்திக் பிணையில் வெளியே வந்த பின்னரும் ஆள் இல்லாத நேரத்தில் தலைமை காவலர் அந்தப் பெண்ணிடம் சென்று உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி இரவு கார்த்திக்கின் கள்ளக்காதலிக்கும் தலைமைக் காவலர் ஏசுதாஸ-க்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கள்ளக்காதலியை தலைமை காவலர் ஏசுதாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து வீடு புகுந்து தலைமை காவலர் இயேசுதாஸ் தன்னை தாக்கியதாக அவருடைய கள்ளக்காதலன் கார்த்திக்கிடம் அந்த பெண் செல்போன் மூலமாக பேசி வர வைத்துள்ளார்.இதனால் அங்கு விரைந்து வந்த கார்த்திக் அங்கிருந்த தலைமை காவலர் ஏசுதாசை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ஏசுதாஸ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி திருமழிசையில் உள்ள கார்த்திக்கின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வெள்ளவேடு காவல்நிலைய காவலர்கள் ஏசுதாஸ், சரத், தாஸ் உள்பட 10 பேர் கொண்ட போலீசார் கார்த்திக்கை மறைவான ஓர் தனி இடத்திற்கு கூட்டி சென்று சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை அங்கிருந்து பூந்தமல்லி கூட்டி வந்து காவலரை தாக்கியதாக கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் நீதிபதியிடம் கார்த்திக் நடந்த சம்பவம் தெரிவிக்கவே கார்த்திக்கை பிணையில் நீதிபதி விடுவித்துள்ளார்.
மேலும் வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலர் ஏசுதாஸ் ஆவடி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் கார்த்திகை கடத்திச் சென்று தாக்கிய தலைமை காவலருடன் உதவிக்கு வந்த 10 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.சட்டத்தை காக்க வேண்டிய காவலர்களே சட்டத்துக்கு புறம்பாக நடந்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.