பதிவு:2024-10-12 19:28:51
திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலில் குழந்தை கையில் இருந்த நகையை பறித்து சென்ற பெண் வீடியோ வைரல் : பக்தர்கள் அதிர்ச்சி :
திருவள்ளூரில் உள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில். இந்த கோயிலில் அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருவதுண்டு. அதேபோல் சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிலில் அம்பாள் சன்னதி முன்பு பெண் ஒருவர் தனது சிறு குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்துள்ளார். குழந்தை அங்கும் இங்குமாக விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது குழந்தையின் தாய் மற்றொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது குழந்தை அங்கிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.அப்போது அக்குழந்தையை கையில் பிளாஸ்டிக் பை வைத்துக் கொண்டு வந்த மர்ம பெண் ஒருவர் அக்குழந்தையை தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே நுழைவாயிலில் இறக்கிவிட்டு குழந்தை கையில் அணிந்திருந்த மோதிரம் பிரேஸ்லெட் ஆகியவற்றை கழற்றிக்கொண்டு குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளார்.இதை அடுத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணவில்லை என பதறப்போனார்.
அப்போது கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த மற்றொரு பெண் குழந்தை தனியாக இருப்பதைப் பார்த்ததும் அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வந்த போது பார்த்த குழந்தையின் தாய் பெற்றுக் கொண்டு கையில் இருந்த மோதிரம் பிரேஸ்லெட் இல்லாததை கண்டு அதிர்சி அடைந்தார். மேலும் கோவில் நிர்வாகத்தினர் சிசிடிவி களை ஆய்வு செய்தபோது மர்மப் பெண் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று கோவிலுக்கு உள்ளே இறக்கிவிட்டு கையில் இருந்த நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது.மேலும் குழந்தையிடம் நகைகளை கொள்ளை அடித்து விட்டு பக்தியுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த மர்மப் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளிக்க பெண்ணிடம் கூறினர்.
ஆனால் கணவருக்கு தெரிந்தால் தன்னிடம் சண்டை போடுவார் என தெரிவித்து விட்டு அழுது கொண்டே குழந்தையை தூக்கிச் சென்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவதால் கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் அருகே இந்த சம்பவம் நடைபெற்று இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கோவில் வளாகத்திலேயே நடைபெற்ற இந்த திருட்டு சம்பவ வீடியோ வைரல் ஆனதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.