பதிவு:2022-06-02 17:14:42
ஆவடி மாநகராட்சியில் “உணவு திருவிழா – 2022” மற்றும் “உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இலட்சி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வெளியிட்டார்
திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட எச்.வி.எப் மைதானத்தில் வருகிற ஜுன் 10 முதல் ஜூன் 12-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக உணவு திருவிழா – 2022 நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் “உணவு திருவிழா – 2022” மற்றும் “உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (WALKATHON)” ஆகிய இலட்சிகளை ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வித்தியாசமான ஒரு உணவு திருவிழா தற்பொழுது நடைபெறவுள்ளது. அதாவது உணவு உண்ணும் போட்டியும், உணவு சமைக்கும் போட்டியும் என சிறப்பான முறையில் விரைவில் செய்யக்கூடிய போட்டிகளும் இத்திருவிழாவில் நடைபெறவுள்ளது.
உணவு திருவிழாவில் இதுவரையில் இல்லாத அளவில் உள்ளூர் உணவகங்கள் முதல் உலக நாட்டு உணவகங்கள் வரை சுமார் 150 உலக புகழ்பெற்ற உணவகங்களில் அறுசுவை அணிவகுப்பாக அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் தலைசிறந்த உணவகங்கள், வெளிமாநில, வெளிநாட்டு உணவு அரங்கங்கள் அந்தந்த மண்ணின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உபசரிப்பையும், உணவையும் வழங்க உள்ளனர். மூன்று நாள் நிகழ்விலும் மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. உலகின் உயரமான,பலூடா ஐஸ்க்ரீம், உணவை வீணாக்காமல் பகிர்வோம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு ஒரு வேளை உணவு வழங்குதல், உபயோகித்த எண்ணெயின் மறு பயன்பாடு என்ற திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கிலோ லிட்டர் பயன்படுத்திய எண்ணெய் சேகரித்து பயோ டீசல் தயாரிக்க வழங்குதல் ஆகிய செயல்பாடுகளில் புதிய உலக சாதனைகள் படைக்கப்படவுள்ளது.
இம்மூன்று நாள்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர பட்டிமன்றம், சொற்பொழிவு, பாட்டு பட்டிமன்றம் என மேடை நிகழ்ச்சிகளும் வடிவமைக்கப்படவுள்ளது. சமையலில் ஆர்வமுள்ள பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளும் பங்குபெறும் வகையில் 10 தலைப்புகளில் சுவையான சமையல் போட்டிகளும், சுவாரசியமான சாப்பாட்டுப் போட்டிகளும் நடைபெறும். போட்டிகளில் வெல்பவர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகளும் அறுசுவை அரசி, அரசன், இளவரசி மற்றும் இளவரசன் என பட்டங்களும் வழங்கப்படவுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் பரவசப்படுத்தும் விதத்தில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. குழந்தைகளைக் கவரும் குய்க் கன் முருகன், பாகுபலி, மோட்டு, பட்லு, டோரா, சோட்டா பீம் போன்ற திரைச்சித்திரங்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. சுதந்திர இந்தியாவின் 75-ஆவது அமுதப் பெருவிழாவினை முன்னட்டு 7.5 கிலோ மீட்டர் நடக்கும் இப்பேரணியுடன் நிறைவடைகிறது.இத்திருவிழாவிற்கான அனுமதி இலவசம். எனவே, அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு அமைச்சர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, உணவு திருவிழா – 2022 நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான “விளம்பர குறும்படங்களை” பால்வளத்துறை அமைச்சர் ஆட்சியர் முன்னிலையில் வெளியிட்டு, பார்வையிட்டு, உணவு பாதுகாப்பு துறை சார்பாக தயாரிக்கப்பட்ட “விளம்பர குறும்படங்களை” செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் திரையிட்டு காட்டுவதற்காக அவ்வாகனத்தை ஆவடி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மேலும், ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட “ஐ ♥ நம்ம திருவள்ளூர் ஆவடி உணவு திருவிழா” என்ற அடையாள சிற்பத்தினை அமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் போஸ், துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாநகராட்சி பணிக் குழுத் தலைவர் சா.மு.நா.ஆசிம் ராஜா, மண்டல குழுத் தலைவர் ஜி.ராஜேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.