பதிவு:2024-11-26 11:16:13
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 510 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பான உதவிகள் வேண்டியும் 510 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமான 116 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 58 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 66 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 75 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 195 மனுக்களும் என மொத்தம் 510 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய மத நல்லிணக்க கொடி நாள் தினம் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கொடி நாள் நிதி வழங்கி துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் திரு.வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி வருவாய் கோட்டாட்சியர்கள் ஆ.கற்பகம், (திருவள்ளூர்) க.தீபா (திருத்தணி) மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.