பதிவு:2024-12-04 11:45:00
விடையூர்-கலியனுர் இடையே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு 13 கிராமங்கள் துண்டிப்பு :
திருவள்ளூர் டிச 03 : ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் விடையூர்-கலியனுர் இடையே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கலியனூர் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் 2016-2017 ஆண்டு 3.60 கோடி ரூபாயில் 120 மீட்டர் தொலைவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆமை வேகத்தில் நடைபெறும் இப்பணி தற்போது பாதியில் நிறுத்தப்பட்டது.
ஆனால் ஆற்றின் நீளம் அதிகமாக இருப்பதால் மேம்பாலம் 120 மீட்டருக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டதால் அத்தகைய மேம்பாலம் முழுமை பெறாமல் கடந்த 8 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டு எந்தவித பணிகளும் மேற்கொள்ளாமல் முழுமை பெறாமல் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேலும் கூடுதலாக ரூ. 3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட இருபுறமும் மேம்பாலம் பணி தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 5 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் மேல்விளாகம் , கலியனூர், மணவூர், நெமிலியகரம், குப்பம் கண்டிகை, இராஜபத்மாபுரம் , மருதவல்லிபுரம், ஒண்டி குச்சி, சின்னம்மா பேட்டை, ஜாகிர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்பட 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் இதனால் அப்பகுதி மக்கள் 25 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 13 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆபத்தான முறையில் சேற்றில் இறங்கியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பகுதியில் ஏரியில் சிலர் இறங்கி நடந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தை விரைந்து அரசு முடிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.