பதிவு:2025-01-08 11:47:02
திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 10 ம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவிப்பு :
திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் 10.01.2025 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண அந்தந்த வருவாய் கோட்டாங்களில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை. வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவு துறை, வங்கிகள் துறை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின் வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.