பதிவு:2025-01-08 11:50:33
பொங்கல் பண்டிகையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு : திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தகவல் :
திருவள்ளூர் ஜன 07 : 2025 பொங்கல் பண்டிகையொட்டி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்புடன் கூடிய பரிசு தொகுப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 30.11.2024 அன்றைய தேதியில் நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைகள் 6,35,516 மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்கள் 923 குடும்பங்களும் பயன்பெறுவர். ஒவ்வொரு நியாய விலைக்கடைகளிலும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 02.01.2025 முதல் நியாய விலைக்கடை விற்பனையாளர்களால் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசுத் தொகுப்பானது 09.01.2025 முதல் 13.01.2025 வரை நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் அங்காடிக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
பொங்கல் தொகுப்பு தொடர்பாக புகார்களை தீர்வு செய்ய மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொது மக்கள் பொங்கல் தொகுப்பு தொடர்பான புகார் ஏதேனும் இருப்பின் இணை பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 9445394673 எண்ணில் மற்றும் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் தெரிவித்தார்.